கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு ஒதுக்கிய மினி ஸ்டேடியத்தை, நகரை ஒட்டிய பகுதியில் அமைக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டரிடம் விளையாட்டு குழுவினர் முறையிட்டனர். பயன்படாத இடத்தில் ஸ்டேடியம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கி இருப்பதால், விளையாட்டு குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க, தமிழக அரசின் சிறப்பு நிதி மற்றும் சட்டசபை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பில், 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி நகரை மையமாக கொண்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளையாட்டு குழுவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நகரில் இருந்து, 15 கி.மீ.,யில் உள்ள பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அமிர்தமங்களம் கிராமத்தில், ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையறிந்த குத்துச்சண்டை, சிலம்பம், வில் வித்தை, தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு குழுவினர், கடந்த 19ம் தேதி கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து, 22ம் தேதி கலெக்டர் பிரதாப்பை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரி விக்கப்பட்டு உள்ளதாவது: கும்மிடிப்பூண்டி பகுதியில், 35க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுவினர் உள்ளனர். பலர், விளையாட்டு பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், நுாற்றுக்கணக்கான வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்க, கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில், கும்மிடிப்பூண்டிக்கு ஒதுக்கிய மினி ஸ்டேடியம், யாருக்கும் பயன்படாத இடத்தில் அமைய இருப்பதாக தகவல் அறிந்தோம். கும்மிடிப்பூண்டி பகுதி விளையாட்டு குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், நகரை ஒட்டிய பகுதியில் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவலறிந்த விளை யாட்டு குழுவினர், எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு பயன்படாத இடத்தில் ஸ்டேடியம் அமைக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். கும்மிடிப்பூண்டி நகர் பகுதியை ஒட்டிய ஊராட்சிகளில் இடம் தேர்வு செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், விளையாட்டு குழுவினர்கள் ஒன்றுகூடி, கவன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.