மூடி இன்றி பாதாள சாக்கடை திறந்து கிடப்பதால் அச்சம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மூடிகள் இன்றி பாதாள சாக்கடை திறந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில், சிப்காட் வளாகம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு, ஏற்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் துார்ந்து போனது. கவனிப்பாரற்ற நிலையில், சாலை மற்றும் தெருக்களின் மத்தியில், மூடிகள் இன்றி பாதாள சாக்கடை காணப்படுகிறது. குறிப்பாக, ஏ.ஆர்.எஸ்., தொழிற்சாலை எதிரே உள்ள முக்கிய சாலையின் நடுவே, ஆறு இடங்களில் மூடிகள் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியை கடந்து செல்வோர் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரத்தில் அவ்வழியாக தொழிற்சாலைக்கு சென்று வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். 'பாதாள சாக்கடை குழிகள் மூடப்பட வேண்டும்; அதுவரை குழிகளை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும்' என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.