25 ஆண்டாக துார்வாராத மங்காபுரம் ஏரி மதகு சேதம் தண்ணீரின்றி வறண்ட அவலம்
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் மங்காபுரம் ஏரி, 110 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியின் நீர்ப்பாசனம் வாயிலாக நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். ஏரியில் தண்ணீர் இருந்தால், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இந்த ஏரியை ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடந்த 25 ஆண்டு களுக்கு மேலாக ஏரி துார்வாரி சீரமைக்காமல் உள்ளது. ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும், ஏரியின் மதகு சேதமடைந்துள்ளது. பருவ மழையின் போது ஏரிக்கு வரும் தண்ணீர் தேங்காமல், சேதமடைந்த மதகு வாயிலாக வெளியேறி விடுகிறது. இதனால், விவசாயிகள் பயிரிட முடியாமல் அவதிப்படுகின்றனர். ஏரியை துார்வாரி, மதகு மற்றும் கரைகள் பலப்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது சிலர், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.மேலும், ஏரியில் இருந்து அரசு அனுமதியின்றி மண் எடுத்து செல்கின்றனர். எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, மங்காபுரம் ஏரியை துார்வாரி சீரமைத்து, மதகு மற்றும் கரைகளை பலப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.