பட்டா மாற்ற ரூ.15,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது
ஆர்.கே.பேட்டை: பட்டா மாற்றம் செய்ய விவசாயிடம், 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த சின்னசானுார் மல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி; விவசாயி. இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, சானுார் மல்லாவரம் வி.ஏ.ஓ., புவியரசன் மற்றும் கிராம உதவியாளர் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் தர விரும்பாத சுப்ரமணி, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று காலை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த புவியரசனிடம், சுப்ரமணி 15,000 ரூபாயை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், புவியரசனையும், கிராம உதவியாளர் பாலகிருஷ்ணனையும் கைது செய்தனர். பின், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புவியரசன் மற்றும் பாலகிருஷ்ணனை அழைத்து வந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் விசாரணை நடத்தினர். ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பின், புவியரசன் மற்றும் பாலகிருஷ்ணனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.