எளாவூர் ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி: எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர். மேம்பாலயோரம் உள்ள மண்ணை அகற்றாததால், அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. உயரமாக வளர்ந்துள்ள செடிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.