| ADDED : ஜூலை 09, 2024 08:43 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜ், 50. இவரது மூத்த மகள் சினேகாவுக்கும், கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த முத்துக்குமார், 30, என்பவருக்கும் 2018 ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.புதிய பைக் வாங்க பணம் தருமாறு நாகராஜியிடம் முத்துக்குமார் கேட்டுள்ளார். மேலும், பணம் வாங்கி வருமாறு மனைவி சினேகாவை அடித்துள்ளார். கோபித்துக் கொண்ட சினேகா தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நாகராஜ் வீட்டுக்கு நேற்று சென்ற முத்துக்குமார் திடீரென அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.காயமடைந்த நாகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, போலீசுக்கு பயந்து விஷம் குடித்துவிட்டதாகக் கூறி முத்துக்குமார் மயங்கி விழுந்தார்.உறவினர்கள் சிலர் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் முத்துக்குமார் விஷம் குடிக்கவில்லை என கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விஷம் குடித்ததாக நாடகமாடிய முத்துகுமார் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிடாமல் இருக்கும் வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.