உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கட்டிய 6 ஆண்டுகளில் உடைந்தது பாலம் மீன்களுடன் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு

கட்டிய 6 ஆண்டுகளில் உடைந்தது பாலம் மீன்களுடன் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு

துாத்துக்குடி:மீன் இறங்கு தளத்தில், 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் வழியாக லாரி சென்றபோது திடீரென உடைந்ததில் லாரி கவிழ்ந்தது. துாத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக 'நபார்டு' வங்கி உதவியுடன், தமிழக மீன்வளத்துறை மூலம், 10.50 கோடி ரூபாய் மதிப்பில் 2019ல் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டது. கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை படகுகளில் இருந்து இறக்கி, வாகனங்களில் ஏற்றுவதற்கு வசதியாக பாலம் போன்ற அந்த இறங்கு தளம் கட்டப்பட்டது. தொடர் அரிப்பு காரணமாக மீன் இறங்கும் தளம் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று படகுகளில் வந்த மீன்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. அப்போது, திடீரென பாலம் உடைந்து பெரியளவில் பள்ளம் ஏற்பட்டதால், கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. துாத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்தமிழ்செல்வன், 30, பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட மீனவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி கவிழ்ந்ததால், மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்தது. பாலம் சேதம்அடைந்தது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கடந்த ஓராண்டாக கொண்டு சென்ற போதிலும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை