| ADDED : ஜூலை 06, 2024 05:24 PM
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற பேரன், உடந்தையாக இருந்த மருமகளை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பலப்பல் நத்தம் ஏரி வட்டத்தை சேர்ந்தவர் அனுமக்காள், 82; கணவனை இழந்து தனியாக வசித்து வந்தார். இவர்களது மகன் சிவராஜ், மகள் சம்பூர்ணம். இருவரும் திருமணமாகி, அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 27ம் தேதி காலை வீட்டில் காது, மூக்கு அறுக்கப்பட்டு நகைகள் எடுத்து சென்ற நிலையில், அனுமக்காள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவக்குமார், 32, அனுமக்காளிடம் மது குடிக்க பணம் கேட்டதால் அவர் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்து, மூதாட்டியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி, அவர் மீது ஏறி அமர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.பின்னர் நகைகளை கழட்ட முடியாததால், காது, மூக்கை அறுத்து, ஒன்றரை பவுன் நகையை எடுத்து கொண்டு மூதாட்டி சுருக்கு பையில் வைத்திருந்த, 350 ரூபாயையும் எடுத்து சென்று, நகையை, தாய் மலரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேரன் சிவக்குமார், நகையை மறைத்து வைத்திருந்த மருமகள் மலர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.