| ADDED : ஜூலை 30, 2024 01:11 AM
உடுமலை:பருவமழைக்கு பிறகு, பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு தேவையான மல்பெரி தோட்ட பராமரிப்பை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. விளைநிலங்களில், புழு வளர்ப்பு மனை அமைத்து, மல்பெரி செடிகளை பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.போதிய மழை இல்லாமல், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், மல்பெரி செடிகளில் தரமான இலைகள் உற்பத்தியாகவில்லை.இதனால், பட்டுப்புழுக்களும் பாதித்து, தரமான பட்டுக்கூடு உற்பத்தியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, உடுமலை பகுதியில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.இதையடுத்து, மல்பெரி தோட்ட பராமரிப்பை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். செடிகளுக்கு உரமிடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பருவ மழைக்கு பிறகு, மல்பெரி இலைகளின் தரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.