உடுமலை;தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், இணையதள பதிவு முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், இலவச பதிவு, ரூ.25 ஆயிரம், 50 ஆயிரம் மற்றும் உடனடி மின் இணைப்பு திட்டமாக, மின் பளுவை பொருத்து, ரூ.2.50 லட்சம் முதல், ரூ.4 லட்சம் வரை செலுத்தி, 'தட்கல்' முறையில், மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டங்களில், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த, 2021ல், தி.மு.க., அரசு பதவி ஏற்றதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தது. இது, 2022ல், 50 ஆயிரமாக குறைந்த நிலையில், கடந்தாண்டு, ஏறத்தாழ, 35 ஆயிரம் வரை மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டது.நடப்பாண்டு, மின் இணைப்பு குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகளும், அதிகாரிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.இந்நிலையில், மின் இணைப்புகளுக்கு பதிவு செய்யும் இணையதளம், கடந்த, ஏப்.,1 முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மின் இணைப்பு பெற முடியமால் விவசாயிகள் பாதிப்பதோடு, மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, தலைமை செயலாளர் வாயிலாக, மின் வாரியத்திற்கு உத்தரவு வரும். அதன் அடிப்படையில் வழக்கப்பட்டது.நடப்பாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமானது. அடுத்து துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரிலும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், நான்கு மாதமாக, விவசாய மின் இணைப்பு பதிவு மற்றும் வழங்கும் பணி முடங்கியுள்ளது,' என்றனர்.