திருப்பூர்:''குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில், துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், 'அப்பகுதியில் பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தி வருகினறனர்.கடந்த, டிச., மாதம், மத்திய தொல்லியல் குழுவினர், அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பிரம்மாண்ட நடுகல், முதுமக்கள் தாழி, பானைகள், எலும்பு துண்டுகள் என, மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திய அவர்கள், 'இது ஆரம்பக்கட்ட ஆய்வு தான்; அடுத்தடுத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'என்றனர். இந்நிலையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, டில்லியில் தொல்லியல் துறை தலைவரை சந்தித்து, குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். குமரிக்கல்பாளையம் பகுதிக்கு வந்திருந்த நாராயணன் திருப்பதி, 387 நாளாக போராட்டம் நடத்தி வரும், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து, 'உங்கள் கோரிக்கை தொடர்பாக, மத்திய தொல்லியல் துறை விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும்' எனஉறுதியளித்தார்.