திருப்பூர்:''பி.ஏ.பி., பாசனப்பகுதியில் ஏற்கனவே, 2,900 விதிமீறல்கள் பாசன பகுதிகளில் உள்ளதாக, நீர்வளத்துறையினர் கூறியுள்ள நிலையில், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம் வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை:முறைகேடான நீர்பாசனத்தால் சீரழிந்த நிலைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்(பி.ஏ.பி.,) தள்ளப்பட்டுள்ளது. தற்போது, செயல்படாத பாசன சபையால், மேலும் நிலைமை மோசமடைந்திருக்கிறது. நீர்பாசன மேலாண்மை குறித்து, பாசன அமைப்புக்கு எவ்வித பயிற்சியும் இதுகுறித்து வழங்கப்படவில்லை; இதுகுறித்து யாரும் கேள்வியும் எழுப்பவில்லை. அனைத்து ஆயக்கட்டுதாரர்களுக்கும் சமமான நீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுவதில்லை.குப்பைத்தொட்டியாக கால்வாய்பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் நீர் போக்கு திறன், 1,030 'கியுசக்ஸ்', (ஒரு நொடிக்கு கன சென்டி மீட்டர்) என்ற நிலையில், 890 'கியுசக்ஸ்' அளவு தண்ணீர் மட்டுமே வெளியேறுகிறது. பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் பல இடங்களில் குப்பை, கோழிக்கழிவுகள் கொட்டப்படுவது, விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியிருக்கிறது.நீரோட்டத்தை அளவிட, 25 ஆண்டு பழமையான 'காலிப்ரேஷன் சார்ட்' பயன்படுத்துவது அபத்தமானது. கால்வாயில், கடந்த மூன்றாண்டாக எந்தவொரு குடிமராமத்து பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் பிரதான மற்றும் உப கால்வாய்கள் உடைந்து, சிதிலமடைந்துள்ளன. நீர் வினியோகத்தில், பி.ஏ.பி., நிர்வாகம் ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாமல் உள்ளது.சடங்கு, சம்பிரதாயமாக பாசன சபைநீர் திருட்டு குறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் இல்லை. ஏற்கனவே, 2,900 விதிமீறல்கள் பாசன பகுதிகளில் உள்ளதாக, நீர்வளத்துறையினர் கூறியுள்ள நிலையில், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பி.ஏ.பி., பாசன அணைகளில், 150 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப்பணிகளின் நிலை குறித்து, பாசன சபை ஆய்வு மேற்கொள்வதாக தெரியவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து பாசன சபை கண்டுகொண்டதாக தெரியவில்லை. பாசன சபை என்பது சடங்கு, சம்பிரதாயமாகவே உள்ளது. பாசன சபையைக் கலைப்பதே சிறந்தது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பொறியியல் விந்தை
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் என்பது, காமராஜர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பொறியியல் விந்தை என, கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தின் கீழ், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த, 2022 ஏப்., மாதம், ஆழியார் வடிநிலக்கோட்டம் மற்றும் திருமூர்த்தி கோட்டம் விவசாயிகள் நீர் பாசன அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. 134 பாசன சபை தலைவர்கள், 700க்கும் மேற்பட்ட ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், 9 பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் ஒரு திட்டக்குழு தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
'சீராக தண்ணீர் பெற முயலும் பாசனசபைகள்'
வெள்ளகோவில் - காங்கயம் பகிர்மானக்குழு தலைவர் பாலசுப்ரமணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:பி.ஏ.பி., பாசனத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சி பகுதியிலேயே தண்ணீ்ர் இல்லாமல் பயிர்கள் வாடுகிறது என்கின்றனர். அணையில் நீர் இருந்தால் தான், கேட்டு வாங்க முடியும். அதுதவிர, மேற்கு பகுதியில் நீர் திருட்டில் பலரும் ஈடுபடுகின்றனர்; இது தவிர்க்கப்பட வேண்டும். நீர் திருட்டில் ஈடுபடுவோரின் மின் இணைப்பை துண்டிக்கவும் வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், விவசாய பயன்பாட்டுக்கு நீர் திருடுவோரின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் தயக்கம் காண்பிக்கின்றனர். சீரான பாசனம் இல்லாததற்கு, அணையில் தண்ணீர் இல்லாதது தான் காரணம். சீரான தண்ணீர் பெற எங்களால் இயன்றளவு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.--