| ADDED : ஜூலை 09, 2024 10:43 PM
திருப்பூர்:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரீப் பருவ நிலக்கடலை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல இடங்களில் நிலக்கடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காரீப் பருவத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 10,000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.நிலக்கடலை சாகுபடி மற்றும் அறுவடைக்கு முன், பின் ஏற்படும் மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்பில் பயிர் சேதமடைந்து விளைச்சல் குறையும் போது, அதற்கு இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில், காப்பீடு நிறுவனத்தினரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தளவு காப்பீடு தொகையை விவசாயிகள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இது விவசாயிகளுக்கு நேரடி பயனளித்து வந்தது. ஆனால், 3 ஆண்டுகளாக காரீப் பருவ சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டம் இல்லாமல் இருந்தது.'காப்பீடு நிறுவனங்கள் முன்வராததே இதற்கு காரணம்' எனக் கூறப்பட்டது. நடப்பாண்டு, காரீப் பருவ நிலக்கடலை சீசன் துவங்கியுள்ள நிலையில், காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, விவசாயிகள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.