பல்லடம்;பல்லடம் அருகே, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இட பிரச்னையால் நடந்த சாலை மறியலை தொடர்ந்து, 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கள்ளிப்பாளையம் ஊராட்சி, வலையபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி, 55 மற்றும் பெரியசாமி, 45. இருவருக்கும் இடையே அண்ணன் தம்பி உறவுமுறை. இப்பகுதியில், இருவருக்கும் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், ஒரு தரப்பினர் கம்பி வேலி அமைக்க முயற்சித்தனர். மற்றொரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவிக்க, இரு தரப்புக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதற்காக, வெளியூரிலிருந்து அடியாட்களை அழைத்து வந்து கம்பி வேலி அமைக்க முயற்சிப்பதாக கூறி, ஒரு தரப்பினர் கிராம மக்களை திரட்டி கொண்டு, -தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அடியாட்களுடன் வந்து கம்பி வேலி அமைக்க முயற்சித்ததுடன், தகாத வார்த்தை பேசி, கைகலப்பில் ஈடுபட முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லாவிடில், கலைந்து செல்ல மாட்டோம் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். டி.எஸ்.பி., விஜிகுமார் பேசுகையில், ''சம்பந்தப்பட்ட இடம் யாருக்கு சொந்தமானது என்பது எங்களுக்கு தெரியாது. யாராக இருந்தாலும், சொந்த நிலத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆட்களை அழைத்து வந்து கம்பி வேலி அமைக்கலாம். இதில் ஏதேனும் ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் போலீசையோ அல்லது வருவாய் துறையையோ நாட வேண்டும். இதனை தவிர்த்து, மறியலில் ஈடுபடுவதால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார். இதனால், காலை 9.30 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம், மதியம், 12.45 மணிக்கு முடிந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில், -தாராபுரம் ரோட்டில், 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து தடைபட்டது.
அரசியல் ஆதாயம்?
இருதரப்பு இட பிரச்னையானது ஆவணங்களை சரிபார்த்து, முறையாக அளவீடு செய்வதன் மூலம் தீர்வுக்கு வரும். ஆனால், அரசியல் ஆதாயம் தேட நினைத்து சில உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தூண்டுதல் காரணமாக, வலையபாளையத்தை சேர்ந்த ஒட்டு மொத்த கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே, பொள்ளாச்சி ரோட்டில் பாலம் வேலை நடந்து வரும் நிலையில். சாலை மறியலால், தாராபுரம் ரோட்டிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.