உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வன எல்லையில் மண் மேடான அகழி துார்வாரி ஆழப்படுத்த எதிர்பார்ப்பு

வன எல்லையில் மண் மேடான அகழி துார்வாரி ஆழப்படுத்த எதிர்பார்ப்பு

உடுமலை: வன எல்லையில், மண் மேடாக மாறியுள்ள, அகழியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, மலையடிவார கிராம விவசாயிகள் வனத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மானுப்பட்டி, ஜல்லிபட்டி, தளி, ஆண்டியூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில், நீண்ட கால பயிராக, தென்னை மற்றும் மா சாகுபடி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், அனைத்து சீசன்களிலும், வனவிலங்குகள், விளைநிலங்களுக்கு வந்து சேதம் ஏற்படுத்துகிறது. இப்பகுதியில், மனித - வனவிலங்கு மோதலை தவிர்க்க, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.அவ்வகையில், கடந்த, 2013ல், மானுப்பட்டி, கொங்குரார்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், வனவிலங்குகளால், விளைநிலங்களில், அதிக சேதம் ஏற்பட்டது.இதையடுத்து, திருமூர்த்தி அணைப்பகுதியில் இருந்து, ஒன்பதாறு செக்போஸ்ட் வரையும், அங்கிருந்து அமராவதி அணை வரை, வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டது.சுமார், 15 கி.மீ., தொலைவுக்கு, 33 லட்சம் ரூபாய் செலவில், அகழி தோண்டப்பட்டது. குறிப்பிட்ட தொலைவுக்கு சோலார் மின்வேலியும் அமைத்தனர். இதனால், மனித - வனவிலங்குகள் மோதலுக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது.ஆனால், அகழியின் தொடர் பராமரிப்பை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால், அகழி முழுவதும் மண் மூடி, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மண் மேடாக அகழி மாறியதால், அனைத்து வனவிலங்குகளும் எளிதாக, வனஎல்லையை கடந்து, விளைநிலங்களுக்கு வருவது தொடர்கதையாகியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: வன எல்லை கிராமங்களில், விவசாய சாகுபடி பயிர்களை காப்பாற்ற, அகழி உதவியாக இருந்தது.தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்காக இடம் பெயரும், வனவிலங்குகளை பாதுகாக்கவும், சாகுபடியை பாதிப்பில் இருந்து மீட்கவும், வன எல்லையில், மண் மேடாக மாறியுள்ள அகழியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ