திருப்பூர்''பள்ளிகளில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருந்தால் தெரிவியுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் செய்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கிறேன்,' என, மாநகராட்சி கமிஷனர் பேசினார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு, வசதிகள், செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மாநகராட்சியில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியில் உள்ள அலுவலர் ஒருவரை, ஒவ்வொரு பள்ளிக்கும் பொறுப்பு அலுவலராக நியமித்து, அவ்வப்போது வளர்ச்சி பணி குறித்து கண்காணித்து, தேவைகள் குறித்து கமிஷனருக்கு அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஜூன், 10ம் தேதி கல்வியாண்டு துவங்கிய நிலையில், மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று, மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். துணை கமிஷனர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கமிஷனர் பேசுகையில், 'பள்ளியில் குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் கட்டுதல், கழிவறை, ஸ்மார்ட் வகுப்பறை, மற்றும் கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் இருக்கும்.அது குறித்து நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். தற்போதைக்கு, பள்ளிகளில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய பணி ஏதேனும் இருந்தால் தயக்கமின்றி தெரிவியுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.உயர்நிலை, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேசுகையில்,'கல்வியாண்டு துவங்கி சில நாட்களாகியும், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடக்கிறது. பெற்றோர் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். எனவே, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீக்கிரம் செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும்,' என, தெரிவித்தனர்.கூட்டத்தில், தங்கள் பள்ளிகளில் உள்ள குறைகள், செய்யப்பட்ட வேண்டிய பணிகளை பட்டியலிட்டு, மாநகராட்சி அலுவலர்களிடம், தலைமையாசிரியர்கள் வழங்கினர்.