பல்லடம், ஜூலை 19----பல்லடம் அருகே, ஆய்வகம், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல், வெறும், 4 வகுப்பறைகளுடன் அரசு பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது, ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட காளிநாதம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி, கடந்த, 2017ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 170க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.போதிய வகுப்பறை கட்டடங்கள் இன்றி இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வந்ததால், அருகிலுள்ள பொன் நகர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நபார்டு வங்கி உதவியுடன் புதிய பள்ளி கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 85 லட்சம் ரூபாய் செலவில், 4 வகுப்பறைகளுடன் புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா செய்யப்பட்டது.பள்ளியில், 6 முதல் 10ம் வகுப்பு வரை, 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர். புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஆய்வகம், கணினி அறை, ஆசிரியர்கள் அறை, நுாலகம், கழிப்பிடம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எதுவுமே இல்லை.மாணவ, மாணவியரை அமர வைப்பதற்கு தேவையான வகுப்பறைகளே போதாது. இதில், இதர அறைகள் இன்றியும், ஆய்வகம், கழிப்பிடம் இல்லாமலும் எவ்வாறு இதை பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு, எந்த வசதியும் இல்லாமல், நேற்று பள்ளி கட்டடம் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.