உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; தன்னார்வலர்களுக்கு பயிற்சி

உடுமலை : புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு, வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது.வயது முதிர்ந்தோர் அடிப்படையான, கல்வி அறிவு பெறாதவர்களுக்கான திட்டமாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வட்டார அளவில் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை கற்போர் மையமாக மாற்றப்படுகிறது.அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, வயது முதிர்ந்த அடிப்படை கல்வி அறிவு பெறாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்றுதரப்படுகிறது. இப்பணிகளுக்கென தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நடப்பாண்டுக்கான இத்திட்டம், கடந்த மாதம் 15ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. உடுமலை வட்டார அளவில், தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்பு நேற்றுமுன்தினம் நடந்தது.போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். வட்டார கல்வி அலுவலர் சரவணக்குமார் பார்வையிட்டார்.உடுமலை வட்டாரத்தில், 1,463 கற்போர் நடப்பாண்டில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, 105 தன்னார்வலர்கள் வாயிலாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்தென பாடத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.பாடமும் படமும், சமூகம், நிர்வாகம், வாழ்வியலும் ஆளுமையும், இயற்கையோடு இணைவோம், ஊரும் ஏரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அடிப்படை கணிதம் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.இதுதவிர, அடிப்படையான சட்டங்கள், அரசின் திட்டங்கள், கடிகாரம் பார்த்து நேரம் கூறுவது, ஆங்கில மாதங்களை அறிவது, நாள்காட்டி, பருவங்களை கூறுவது,குறிப்பாக பெயரை எழுதுவதற்கும், படிப்பதற்குமான பயிற்சி, உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு, பயணச்சீட்டு பெறுவதற்கு உரிய கட்டணம் செலுத்துவது அதற்கான மீதம் பெறுவது, ரயில் முன்பதிவு செய்வது, வங்கிகளில் படிவங்கள் பூர்த்தி செய்வது, அஞ்சலகத்தில் பணம் போடுவது, பல்வேறு மோசடிகள் குறித்த விழிப்புணர்வு, கிராமங்களில் நடக்கும் கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பாடங்கள் உள்ளன.நடப்பாண்டின் இறுதியில் கற்போருக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !