உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

உடுமலை:உடுமலையில், வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவு, உடைந்த மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பும், வனவிலங்குகளுக்கு ஆபத்தும் ஏற்படும் சூழல் உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையாக, மூன்று ரோடு சந்திக்கும் ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதி உள்ளது. இப்பகுதி, கேரளா - தமிழக எல்லையாகவும், உடுமலை - மூணாறு வழித்தடமாகவும் உள்ளது.இதனால், இந்த ரோட்டில் ஏராளமான சுற்றுலா பயணியர், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், மலையடிவாரத்தில் கொட்டப்படுகிறது.மேலும், இங்கு மதுக்கடையும் அமைந்துள்ளதால், போதை ஆசாமிகள் ரோட்டின் இரு பக்கமும் அமர்ந்து மது குடிப்பதோடு, மது பாட்டில்களை உடைத்து வீசியும், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களையும் ரோட்டில் இரு புறமும் வீசி செல்கின்றனர்.வனத்துக்கு செல்லும் ரோட்டின் இரு பக்கமும், உடைந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு அதிகளவு காணப்படுவதால், வனத்தின் சூழல் பாதிப்பதோடு, சுகாதார சீர்கேடும், வனவிலங்குகளுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.இப்பகுதிகளில், ஏராளமான வன விலங்குகள் உள்ளதோடு, மலைகளில் பெய்யும் மழை, ஓடை வழியாக நீர் வழித்தடத்தில் இணையும் போது, கழிவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.மழை பெய்தால், ஓடையில் அடித்து செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், நேரடியாக வன விலங்குகளின் குடிநீருக்கான நீர்நிலைகளில் கலப்பதால், வனவிலங்குகளுக்கு அபாயம் ஏற்படும்.எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள கடைகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை