| ADDED : ஜூன் 16, 2024 12:39 AM
திருப்பூர்:தக்காளி விலை ஏறுமுகமாக இருப்பதால், 'பொடி' தக்காளிகள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன.தக்காளி விலை கடந்த 10 நாளாக ஏறுமுகமாக உள்ளது. கிலோ, 40 முதல், 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுவதால், அளவில் சிறியதாக, முழுமையாக விளைச்சல் பூர்த்தியாகாத பொடி தக்காளிகளுக்கு மவுசு கூடியுள்ளது.தோட்டங்களில், செடிகளில் உள்ள பொடி தக்காளிகளை கூட விட்டு வைக்காமல் லாபத்தை எதிர்பார்த்து, இவற்றையும் விவசாயிகள் பறித்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர். பொடி தக்காளி, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மளிகை கடை, காய்கறி வியாபாரிகள் பலரும் இவற்றை வாங்கி செல்கின்றனர்.நேற்று, முதல் தர தக்காளி, 14 கிலோ எடை கொண்ட கூடை, 800 ரூபாய்; 28 கிலோ எடை கொண்ட கூடை, 1,600 ரூபாய்க்கும் விற்றது. அதே நேரம், பொடி தக்காளி, 14 கிலோ கூடை, 450 ரூபாய்க்கு கிடைக்கிறது. பொடி தக்காளிகள் சாம்பார், ரசத்துக்கு ருசியாக இருக்காது என்று இல்லத்தரசிகள் பலர் தவிர்க்கின்றனர். விலையைப் பார்த்து சிலர் வாங்கிச்செல்கின்றனர்.----தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த 'பொடி' தக்காளி
தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு இரண்டு முதல், நான்கு டன் தக்காளி வந்த நிலை மாறி, 1.50 முதல் 1.80 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. விற்பனை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், பத்து நாட்களுக்கு மேலாகியும், தக்காளி வரத்தில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. உள்ளூர் தக்காளி வரத்து போதுமானதாக இல்லை. வெளிமாநில வரத்தை நம்பியே விற்பனை செய்கிறோம். வரத்து அதிகரித்தால் விலை குறையும். இல்லையெனில் விலை தொடர்ந்து உயரும்.
- வியாபாரிகள்.