திருப்பூர்: வருங்கால 'நீரஜ் சோப்ரா'க்களாகும் ஆர்வம் பொங்க, மாநில அளவிலான எறிதல் போட்டியில், வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.கடந்த, 2021 ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். இத்தினத்தை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக மத்திய அரசு அறிவித்தது.இதை, ஆண்டு தோறும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் சார்பில், கடந்த, 2 ஆண்டுகளாக மாநில அளவிலான எறிதல் போட்டிகள், அதாவது, ஈட்டி எறிதல், குண்டெறிதல், வட்டெறிதல் மற்றும் சங்கிலி குண்டெறிதல் போட்டிகள் நடத்தப் படுகின்றன.மூன்றாம் ஆண்டு போட்டி, திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், திருப்பூர் ராக்கியபாளையம் ஐ-வின் டிராக் மைதானத்தில் நடத்தப்பட்டது. 16, 18, 20 மற்றும் பொதுப்பிரிவில் நடந்த போட்டியில், மாநிலம் முழுக்க இருந்து, 320 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிக்காட்டினர். 20 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.துவக்க விழாவில், திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சந்தீப்குமார், ஜெயபிரகாஷ், மதிவாணன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன், திருப்பூர் தடகள சங்க மூத்த துணை தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் தேசிய கொடி மற்றும் மாவட்ட தடகள சங்கத்தின் கொடியேற்றினர்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு குமார், திருப்பூர் தடகள சங்க இணை செயலாளர்கள் அழகேசன், ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளிகள் சங்க செயலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநில தடகள சங்கத் தொழில்நுட்ப குழு சேர்மன் சீனிவாசன் நன்றி கூறினார்.