| ADDED : ஜூலை 21, 2024 10:54 PM
திருப்பூர்:வீரபாண்டி வஞ்சி நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், மாநகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைத்தால்தான் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.ஐகோர்ட் உத்தரவு; நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, திருப்பூரில் நீர் நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் இருந்த நுாற்றுக்கணக்கான வீடுகள் காலி செய்யப்பட்டன. காலி செய்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீரபாண்டி வஞ்சிநகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. நேற்று அப்பகுதியில் குறை கேட்பு முகாம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். வார்டு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கலந்து ெகாண்டனர்.வஞ்சி நகருக்கு பஸ் ஸ்டாப் வசதி; கூடுதல் பஸ்கள் இயக்கம்; குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுகோள்கள் முன் வைக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இக்குடியிருப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. வாரியம் மூலம் இதை வகை மாற்றம் செய்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் அதன் பராமரிப்பை ஒப்படைத்தால் மட்டுமே மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இது குறித்து வாரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான தீர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.