| ADDED : ஜூன் 07, 2024 12:27 AM
பொங்கலுார்;பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்தாண்டு போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால், பெரும்பாலான அணைகள் பாதி அளவு கூட நிரம்ப வில்லை. நடப்பாண்டு முதல் மண்டல பாசனத்திற்கு இரண்டரை சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.கடந்த பிப்., மாதம், திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு சுற்று விடப்பட்ட நிலையில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால், தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.தற்போது, பி.ஏ.பி., தண்ணீர் பாயும் பல்லடம், பொங்கலுார், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான அளவு கோடை மழை பெய்யவில்லை. கடும் வெப்பம் நிலவியதால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து உள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வைகாசி பட்ட சாகுபடி பரப்பு தண்ணீர் பற்றாக்குறையால் சரிந்துள்ளது. சமீபத்தில் பெய்த கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை துவங்கியது போன்றவற்றால் சோலையார் அணை நீர்மட்டம், 40 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி நீர்த்தேக்கத்திலும், 30 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, முதல் மண்டல பாசனத்திற்கு உடனடியாக பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டு கோள் வைத்துள்ளனர்.பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சிலர் கூறியதாவது:பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது, ஒன்பது சுற்றில் இருந்து ஐந்து சுற்றுகளாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டு அதிலும் பாதியாக குறைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் பத்து நாட்கள் மட்டுமே இரண்டு சுற்றுக்களிலும் சேர்த்து தண்ணீர் விடப்பட்டது.பெரும்பாலான கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. தற்போது மழை பெய்ததால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட அரை சுற்றுக்கு பதிலாக ஒரு சுற்று தண்ணீரை முதல் மண்டல பாசனத்திற்கு உடனடியாக திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.