காணாமல் போன 52 ஆயிரம் நீர் நிலைகள்
'இன்ஸ்பெக்டர் ஐயா, காணாமல் போன கிணற்றை கண்டுபிடிச்சு கொடுங்க...' என தமிழ் திரைப்படமொன்றில் வெளியான நகைச்சுவை பரவலாக பலரையும் ஈர்த்தது. ஆனால், அது சிரிப்பதற்கான விஷயம் என்றாலும் கூட, தமிழகத்தில், 52ஆயிரம் நீர் நிலைகள் மாயமாகி விட்டது என்று எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்துார் பாரி, சொன்னது வேதனை தரக்கூடிய விஷயமே.அந்த அதிர்ச்சி உரையை கேட்டு, பசுமை ஆர்வலர்கள் உறைந்த இடம், திருப்பூரில் நடந்த, 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்ட விழா.நாடு முழுவதும் பயணித்த தனது அனுபவங்களை அவர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்...தற்போதுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், 1970ல் மரங்களை வெட்டி வருவாயை பெருக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. மரங்களை பாதுகாக்க, மரங்களை கட்டியணைக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, 1730ம் ஆண்டில், ராஜஸ்தானில், மரங்களை கட்டியணைக்கும் இயக்கம் நடந்துள்ளது. அரண்மனை கட்டுமான பணிக்கு, மரங்களை வெட்டி அரசர் உத்தரவிட்டார். அமிர்தா தேவி என்ற அம்மையார், மரங்களை வெட்ட விடமாட்டேன் என்று மரங்களை கட்டியணைத்தாார்.அதனால், அரண்மனை பணியாளர், அம்மையார் தலையை துண்டித்தனர். அடுத்து, அவரது மூன்று மகள்களும் மரத்தை கட்டியணைத்தனர். இப்படியே, மரங்களை பாதுகாக்க, 362 பேர் உயிர் தியாகம் செய்கின்றனர். அரசுக்கு தகவல் செல்கிறது; மரம் வெட்டும் உத்தரவை நிறுத்தி வைக்கிறார். அதற்கு முன்னதாகவே, மரங்களை பாதுகாக்க வேண்டுமென, 1520ல் முடிவு செய்த வரலாறும் உண்டு. ராஜஸ்தானில் பெரும் வறட்சி ஏற்பட்டது. வறட்சிக்கு காரணம் மரங்களை வெட்டியதுதான் என, செல்வந்தர் ஒருவர் முடிவு செய்து, வறட்சியை போக்க, நீர்நிலைகளை பராமரித்து, மரங்களை நட்டு வளர்க்கும் இயக்கத்தை துவக்கினார். மாற்றம்தேவைஅதேபோல், திருப்பூரில் இருந்து ஆடைகளை மட்டுமல்ல; நல்ல சேவை மனப்பான்மையுடன் கூடிய கருத்துக்களையும் ஏற்றுமதி செய்கிறீர்கள். பொருளாதாரம் கூடும் போது, மனச்சிக்கலும் அதிகரிக்கிறது. இந்தியாவில், 26 சதவீதம் பேர், ஏதாவது மன நோயுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில், புற்றுநோய், சர்க்கரை நோய், இந்தியாவில் தான் அதிகம் பரவுகிறது. வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மரம் நடுவது மட்டுமல்ல, நல்ல பணிகளை அனைவரும் தொடர வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாக, மழை, இரண்டரை மடங்கு அதிகரிக்குமென, ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள் பங்களிப்பு இல்லாத சேவைப்பணி நிறைவு பெறாது. ஏரி, குளம், ஆறு, கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. வீட்டு குழாயில் தண்ணீர் வருவதால் அதற்கான மூலாதாரம் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.மாயமானநீர்நிலைகள்தமிழகத்தில் மட்டும், 1.07 லட்சம் நீர்நிலைகள் இருந்துள்ளன; அவற்றில், 52 ஆயிரம் நீர் நிலைகள் பயன்பாட்டில் இல்லை. நாட்டின் பரப்பளவில், தமிழகம், 4 சதவீதம், மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், 7 சதவீதம், நீராதாரத்தில், 2.50 சதவீத பங்களிப்பு தான் தமிழகத்தில் இருக்கிறது. தமிழக அரசு, 10 ஆண்டுகளில், நீர்நிலைகளை பராமரிக்க, 40 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளனர்; இருப்பினும், எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துணி கழிவு அதிகம்துணிக்கழிவு அதிகம் உருவாவது நம் நாட்டில் தான். நீர்நிலைகளில் துணியை விடுவது பாவம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பாபநாசத்தில், மக்கள் ஆற்றில் விடும் துணிகளை சேகரித்து, பக்குவப்படுத்தி, மறு பயன்பாட்டுக்கு தயார் செய்கிறோம். தொட்டியில் போடப்படும் துணிகளில் இருந்து, மிதியடிகள் தயாரித்து, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம்; இதில், 30 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.
கழிவுநீரை சுத்திகரிக்கும் வெட்டிவேர்
''தமிழகத்தில் இருந்த வெட்டி வேரை நாம் பயன்படுத்துவதில்லை, 120 நாடுகளில் முறையாக பயன்படுத்துகின்றனர். ஐந்து டிகிரி முதல் 55 டிகிரி காலநிலை மாற்றத்திலும் வளரும் தன்மையுள்ளது. செடி ஐந்தடி வளர்ந்தால், வேர் எட்டு அடி நீளம் வளரும். சட்டீஸ்கர் மாநிலத்தில், அதிகபட்சமாக, 24 அடி நீளம் வளர்ந்துள்ளது.கேரளா வயநாட்டில், மண்சரிவை தடுக்க, 10 லட்சம் வெட்டி வேர் செடிகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.திருப்பூரிலும் அதிக அளவு வெட்டி வேர் சாகுபடி செய்து, சூழலை மாற்ற வாய்ப்புள்ளது,'' என்கிறார் செந்துார் பாரி.