உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இன்று அரசு விடுமுறை என்பதால், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 15 விவசாயிகள், 50 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். அன் சல்பர் கொப்பரை கிலோ, ரூ.200க்கும், முதல் தரம், ரூ.169.99 முதல், ரூ.184.73 வரையும், இரண்டாம் தரம், ரூ.101.76 முதல், ரூ.159.76 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. இத்திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.