திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்திய, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில், திருப்பூர், சின்னியகவுண்டம்பாளையம், பிளாட்டோஸ் அகாடமி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல் கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலும், படிப்பின் மீதும் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்க, 'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதி போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்படும். திருப்பூர், சின்னியக்கவுண்டன்புதுார், பிளோட்டோஸ் அகாடமியில் நடந்த தகுதிச்சுற்றில், 170 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் ஜான்ஜூலிவிஸ், இதே அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சுபாஷினி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்; இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பிளாட்டோஸ் அகாடமி 'பட்டம்' ஒருங்கிணைப்பாளர் பிரியாலட்சுமி, முதல்வர் ஸ்ரீ குமாரி, இயக்குனர் ஹரிகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிலா, வினாடி வினா போட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னபூரணி ஆகியோர் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியன கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.