உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மறைக்க லாரி ஸ்டிரைக்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மறைக்க லாரி ஸ்டிரைக்

திருப்பூர் : 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்புவதற்காக, லாரி ஸ்டிரைக்கை மத்திய அரசு பயன்படுத்துவதாக மக்களுக்கு சந்தேகம் எழுகிறது,' என, 'சிஸ்மா' சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.இச்சங்க பொது செயலாளர் பாபுஜி வெளியிட்டுள்ள அறிக்கை:லாரிகள் வேலை நிறுத்தத்தால், கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. வெளிமாநிலங்களுக்கு பனியன் உள்ளாடைகள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டால், பண பரிவர்த்தனை பாதிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடைஉற்பத்தியாளர்கள் நடைமுறை சிக்கலுக்கு ஆளாவார்கள்.பனியன் தொழிலை பொறுத்தவரை, சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களுக்கு சென்று பனியன் துணிகளுக்கு சாயமிட்டு வருகின்றனர். லாரிகள் வேலை நிறுத்தத்தால், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது.வாரம் 10 'ஷிப்ட்'டுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, ஐந்து 'ஷிப்ட்' வேலை கிடைப்பதே சிரமமாக உள்ளது.பண்டிகை காலம் நெருங்குவதால், ஆயத்த ஆடைகளை சந்தைப்படுத்துவதற்காக, வெளிமாவட்ட, வெளிமாநில சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடைகளிலும், துணிகள் தீர்ந்து வருவதால், புதிய சரக்குகள் வராமல், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.இதே நிலை தொடர்ந்தால், தென்மாநில அளவில் நடக்கும் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் பரவும் சூழல் ஏற்படும். போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்புவதற்காக, லாரி ஸ்டிரைக்கை பயன்படுத்துவதாக மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றத்தை தவிர்க்கவும், தொடர் பண்டிகை காலங்களை ஒட்டி, வர்த்தக ரீதியான பிரச்னைகளை தவிர்க்கவும் மத்திய அரசு பேச்சு மூலமாக சுமூக தீர்வு காண வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ