உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "நேதாஜி மைதானத்தில் விளையாட்டை தவிர மற்ற விழாக்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது

"நேதாஜி மைதானத்தில் விளையாட்டை தவிர மற்ற விழாக்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது

உடுமலை : 'உடுமலை நேதாஜி மைதானத்தை விளையாட்டு போட்டிகளை தவிர மற்ற விழாக்கள் நடத்த அனுமதி அளிக்க கூடாது,' என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கல்பனா ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. பலரும் காலை, மாலை நேரத்தில் வாக்கிங் செல்லவும், கிரிக்கெட், வாலிபால், ஹாக்கி போன்ற போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பயிற்சி களமாகவும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். மைதானத்தில் பல்வேறு மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. உடுமலை பகுதி மக்கள் அதிகளவு பயன்படுத்தி வரும் மைதானத்தை நடப்போர் சங்கம் என அமைத்து, பராமரிப்பு பணிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. முறையாக பராமரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மைதானம் கடந்த சில ஆண்டுகளாக அமைப்புகள், கட்சியினர் விழாக்கள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மைதானம் சேதப்படுத்தப்பட்டு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு நடந்த விழாவில் பங்கேற்ற பலரும் மைதானத்தை 'பார்' ஆக மாற்றி மது குடித்துள்ளனர். அப்படியே மைதானத்தில் தூக்கி வீசி விட்டும் சென்றனர். காலையில், மைதானத்திற்கு வழக்கம் போல வந்தவர்கள், மைதானமே அலங்கோலமாக காட்சியளித்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு பக்கம் மதுபான பாட்டில்களும், சாப்பிட கொடுத்த உணவு பொட்டலங்களையும் வீசி சென்றுள்ளனர். திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தியுள்ளதால், மைதானம் சுகாதாரமின்றி காணப்பட்டது.விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில், 'மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில் பயன்படுத்த மது பான பாட்டில்கள், உணவு பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளதால், சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில், விளையாட்டு போட்டிகளை தவிர மற்ற விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி