திருப்பூர் : ''அரசியல் இயக்கமாக இல்லாவிட்டாலும், இந்து விரோத அரசை
அகற்றுவதிலும், மக்கள் நல அரசை உருவாக்குவதிலும் இந்து முன்னணி அதிக கவனம்
செலுத்தும்,'' என மாநில அமைப்பாளர் ராமகோபாலன் பேசினார்.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில், திருப்பூரில்
500க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்த அச் சிலைகள் எடுத்து வரப்பட்டு
ஆலாங்காட்டில் விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்
செந்தில் வரவேற்றார். பொது செயலாளர் சுப்ரமணியம், மாநில நிர்வாகிகள்
பழனிசாமி, ராமசாமி முன்னிலை வகித்தனர்.மாநில அமைப்பாளர் ராமகோபாலன்
பேசியதாவது:தமிழகத்தில் அமைந்துள்ள அரசு, பொதுமக்கள் நலனை நன்கு உணர்ந்து,
பல்வேறு நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தை அறிவித்துவிட்டு, வேறு வேலையை பார்க்காமல், சிறப்பாக
நடைமுறைப்படுத்தும் வகையில், கண்காணித்தும் வருகிறது. நூறு நாட்களில்,
மதிப்பிட முடியாத அளவு சாதனைகளை படைத்த இந்த அரசை, இந்து முன்னணி மனதார
பாராட்டுகிறது.கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள், நில மோசடி செய்வதிலும்,
கோவில் நிலங்களை சுரண்டி எடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள்
தற்போது தண்டனை பெற்று வருகின்றனர். நில மோசடி வழக்கில்,
அ.தி.மு.க.,வினரும் தண்டிக்கப்படுவது பாராட்டத்தக்கது. மத்திய அரசு கொண்டு
வர உள்ள மதக்கலவர தடுப்பு மசோதா அமலானால், அடிப்படை உரிமைகளை இந்து மக்கள்
இழந்து வாட வேண்டியிருக்கும். அதை நன்கு உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா,
தடாலடியாக எதிர்ப்பு தெரிவித்து, மற்ற மாநில முதல்வர்களிடமும் ஆதரவு கேட்டு
வருகிறார்.நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமல்ல; அனைத்து மதத்தினரும் சகல
வசதிகளுடன் வாழலாம். ஆனால், அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.
தேச துரோகிகளுக்கு இந்தியாவில் ஊசிமுனை அளவு கூட இடம் அளிக்க இந்து முன்னணி
ஒப்புக்கொள்ளாது. திருப்பூர் சாயப்பிரச்னையால், பல்வேறு துயரங்கள்
ஏற்பட்டாலும், வேகமாக சுழன்று வரும் அரசு, விரைவில் பிரச்னைக்கு நிரந்தர
தீர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில்,
தமிழகத்தில் ஆலய தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது கேலிக்குரியது. எனவே,
கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து பசுக்களை
கடத்திச் சென்று கேரளாவில் வதம் செய்வதை தடுக்க வேண்டும். இந்து முன்னணி,
அரசியல் இயக்கமாக இல்லாவிட்டாலும், இந்து விரோத அரசை அகற்றுவதிலும், மக்கள்
நல அரசை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தும்.இவ்வாறு, ராமகோபாலன்
பேசினார்.ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால்,
திருப்பூரில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் தாராபுரம் அமராவதி
ஆற்றில் கரைக்கப்பட்டன.