உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்களில்... பறிபோகும் பசுமை!பிரச்னைகளை கண்டுகொள்ளாத அரசால் கவலை

வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்களில்... பறிபோகும் பசுமை!பிரச்னைகளை கண்டுகொள்ளாத அரசால் கவலை

உடுமலை;பருவமழைக்கு பிறகு, வெள்ளை ஈ தாக்குதல், தென்னை சாகுபடியில், வேகமாக பரவி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது; தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், பல லட்சம் தென்னை மரங்கள் நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இச்சாகுபடியில் தொடர் நோய்த்தாக்குதல், விலை சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி, பல ஆயிரம் தென்னை மரங்கள் பசுமையிழந்து வருகிறது.

பல வருஷமாச்சு

கடந்த 2016ல், பொள்ளாச்சி பகுதியில், தென்னை சாகுபடியில், இத்தாக்குதல் பரவ துவங்கியது. வெள்ளை ஈக்களின் வாழ்க்கை சுழற்சி மொத்தம் 30 நாட்களாகும். ஐந்து வளர்ச்சி நிலைகளை கொண்ட, இந்த ஈக்கள், 200க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்கும்.இறக்கைகளை கொண்ட ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம், சாதாரண வெள்ளை ஈக்களை விட மூன்று மடங்கு அளவில் பெரியதாக இருக்கும். இலைகளின் கீழ்பரப்பில் சுருள், சுருளாக இப்பூச்சிகளின் முட்டைகள் காணப்படும்.முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உடலிலிருந்து சுரக்கும், ஒரு வகை தேன் போன்ற இனிப்பு திரவத்தினால், கரும்பூஞ்சாணம் பெருமளவில் அதன் மேல் வளர்ந்து, பயிர் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, பயிர் வளர்ச்சி குன்றி விடுகிறது. காய்ப்புத்திறன் முற்றிலுமாக குறைந்து விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

மானியம் என்னாச்சு?

வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முன்பு, வேளாண்துறை சார்பில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்; மஞ்சள் நிற ஒட்டுப்பொறி அமைக்க மானியத்திட்டமும் கொண்டு வரப்பட்டது.தற்போது தென்னை சாகுபடி, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எவ்வித மானிய திட்டமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இதனால், மாதம்தோறும் பல ஆயிரம் தென்னை மரங்கள் காய்ப்புத்திறன் இழப்பதும், நோயை கட்டுப்படுத்த முடியாமல், மரங்களை வெட்டி அகற்றுவதும் தொடர்கதையாகியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: தென்னை சாகுபடியாளர்களின் எவ்வித பிரச்னைகளையும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. நோய்த்தாக்குதலால் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், போதிய விலையும் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.இது குறித்து அரசுக்கு பல முறை மனு அனுப்பியும், விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியும் அரசு அலட்சியமாகவே உள்ளது.பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.இதே நிலை நீடித்தால், தேங்காய் உற்பத்தியில் முன்னிலை என்ற தகுதியை, இப்பகுதி இழந்து விடும்; தென்னை மரங்கள் அகற்றப்பட்டு, விலை நிலங்களாக மாறி விடும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வள்ளி
ஜன 22, 2024 08:12

அரசு வந்து ஈ ஓட்டணுமா? உங்க பயிர். நீங்கதான் ஓட்டிக்கணும். அரசு புகுந்தால் ஆட்டையப் போடும்னு தெரியாதா?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ