சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை
திருப்பூர்: அவிநாசி ஒன்றியம், பழங்கரையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி, 62. ரியல் எஸ்டேட் தரகர். அதே பகுதியில் சில வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு தொழிலாளி குடும்பம் வசித்து வந்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம், 2023ம் ஆண்டில் ரத்தினசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவிநாசி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரத்தினசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜரானார். இதில் ரத்தினசாமிக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.