உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகளை கேட்டால் மட்டும் போதுமா? நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்

குறைகளை கேட்டால் மட்டும் போதுமா? நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்

திருப்பூர்;குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நேர்மையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டன.நாச்சிபாளையம் பகுதி மக்கள்:திருப்பூர் தெற்கு தாலுகா, நாச்சிபாளையம், ஜி.எம்., கார்டன் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதுவரை எங்கள் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை.கடந்த ஒரு வாரத்துக்கு முன், வெளிமாநிலத்தவர் இரண்டு பேர், எங்கள் பகுதி பெண் குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். இதுதவிர, 13ம் தேதி, வீடுபுகுந்து திருட்டு முயற்சியும் நடந்தது. திருடனை பிடித்து அவிநாசிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தோம்.மக்களின் அச்சத்தை போக்க, உடனடியாக தெருவிளக்கு வசதி செய்துதரவேண்டும். போலீசார் அவ்வப்போது ரோந்து வர வேண்டும். திருட்டு, பெண் குழந்தைகளை கடத்தச் செல்லும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.வள்ளிபுரம் ஊராட்சி, 4வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன்:திருநகரில், 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், சேதமடைந்துள்ளது. கழிப்பிடம், துணி துவைப்பது, குளிப்பதற்கு பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகத்தை சீரகை்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்:தமிழகத்தில், சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடுவோரை, தாக்குவது, கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஊத்துக்குளி தாலுகா, சர்க்கார் பெரியபாளையத்தில், கல்குவாரிக்கு எதிராக போராடிவரும் விவசாயி நடராஜன் மீது, வாகனம் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது. சிறப்பு குழு அமைத்து, கொலை முயற்சி தொடர்பான வழக்கை விசாரிக்கவேண்டும்.* திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள அம்பேத்கரின் மார்பளவு சிலையை, முழு உருவ வெண்கல சிலையாக மாற்றி அமைக்க கோரி, தேசிய புலிகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.* ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசெல்வ முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ள இடத்தில், இலங்கை தமிழர்கள் பயன்பாட்டுக்கோ அல்லது வேறு அரசு பயன்பாட்டுக்கு வழங்க கூடாது என கிராம மக்கள் மனு அளித்தனர்.-----------------திருப்பூர், காங்கயம் ரோடு, திருமுருகன் நகரில், தெரு விளக்கு இல்லாததால், திருடர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது என கூறியும், மண்பாண்டம் செய்ய மண் எடுக்க அனுமதி கேட்டும , கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

மனுவை படிப்பதுகூட இல்லையோ…!

முதல்வரின் முகவரிக்கு அனுப்பப்படும் மனுக்களுக்கு, 30 நாளில் ஏதோ ஒரு பதிலளித்து, கணக்கை முடித்துவிடவேண்டும் என்பது, அதிகாரிகள் சிலரின் எண்ணமாக உள்ளது. சம்பந்தமே இல்லாத பதிலளிப்பதால், மனுவை அதிகாரிகள் சரியாக படித்துக்கூட பார்ப்பதில்லையோ என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. திருப்பூரை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், 'திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையத்தில், அனுமதியின்றி பள்ளி கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. பள்ளிக்கு, தடையின்மை சான்று வழங்க கூடாது' என, முதல்வரின் முகவரிக்கு கடந்த ஜூன், 28ல் புகார் மனு அனுப்பியுள்ளார்.இதற்கு, மாவட்ட வனத்துறை அதிகாரிகள், 'மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கூலிபாளையம் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில், நில அளவை செய்யப்பட்டு பணி நடைபெற்றுவருகிறது. சூழல் சுற்றுலா பணிகளை துவங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுவருகிறது' என சம்பந்தமே இல்லாமல் பதில் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ