உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவக்கம்

நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவக்கம்

திருப்பூர்:திருமுருகன்பூண்டியில் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. அவிநாசி, திருமுருகன் பூண்டி வழியாக அமைந்துள்ளது நல்லாறு. பெயர் மட்டும் தான் நல்லாறு என்று உள்ளதே தவிர, இந்த ஆறு ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டே காணப்படுகிறது. ஆற்றை மீட்டெடுத்து, முறையாக பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்பது பலரது விருப்பம். இதுகுறித்த ஒத்த கருத்துடைய இயற்கை ஆர்வலர்கள் இதற்கான ஒரு அமைப்பை துவங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். முதல் நடவடிக்கையாக இந்த ஆர்வலர்களின் முதல் கலந்தாலோசனை கூட்டம் நேற்று திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், பூண்டி நகராட்சி கவுன்சிலர் குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில், நல்லாறு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நல்லாற்றை பாதுகாத்து மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. --- நல்லாறு ஆற்றை மீட்டெடுக்க சபதம் நல்லாற்றில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றி துார் வார வேண்டும்; ஐ.ஏ.எஸ். அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து இதன் வழியில் கட்டப்படும் கட்டுமானங்கள் ஆய்வு செய்ய வேண்டும். பூண்டி நகராட்சி பகுதியில் இதை துார் வாரும் விதமாக, நகராட்சி சிறப்பு கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள், 'ஒன்றிணைவோம்; நல்லாறை பாதுகாப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை