உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேரளாவில் நிபா வைரஸ்; மாவட்ட எல்லையில் உஷார்

கேரளாவில் நிபா வைரஸ்; மாவட்ட எல்லையில் உஷார்

திருப்பூர்; கேரளாவில் நிபா வைரஸ் பரவல் துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக எல்லையோர மாவட்டங்கள் உஷாராக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு தென்பட துவங்கியுள்ளது. 38 வயது பெண்ணுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எச்சரித்த கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறப்பு குழு அமைத்து கண்காணிப்பை அம்மாநிலத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.அருகில் உள்ள கேரளாவில் இருந்து, தமிழக எல்லை வழியாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருவோரை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளா - தமிழக எல்லையான சின்னாறு மற்றும் ஒன்பதாறு, சோதனைச்சாவடிகளில், தொடர் காய்ச்சல் பாதிப்புடன் யாராவது கேரளாவில் இருந்து வருகிறார்களா என கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் முககவசம் அணியவும், தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவும் சுகாதாரக்குழுவால் அறிவுறுத்தப்படுகின்றனர். கடுமையான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருவோர் உடல் நிலை மருத்துவக்குழு வாயிலாக பரிசோதிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அச்சப்படக்கூடிய சூழல் இல்லை. அருகில் உள்ள மாநிலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ