அய்யன்கோவில் பள்ளியில் மழைமானி அமைப்பு
திருப்பூர்:சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அய்யன்கோவில் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை மானி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் துவக்கி வைத்தார். அறக்கட்டளையினர் கூறுகையில், ''விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள மழை நிலவரம் குறித்து குறிப்பிட்ட இடங்களிலிருந்து தான் தகவல் பெற முடியும். பெய்த மழை அளவு என்பது ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என வழக்கத்தில் உள்ள அளவை மட்டுமே எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். எங்கள் பகுதியில் பெய்த மழை அளவை அறிந்து கொள்ளும் வகையில் மழை மானி அமைத்துள்ளோம். மழை நாட்களில் இதில் பதிவாகும் அளவு குறித்து வாட்ஸாப் குரூப்பில் தகவல் பகிர்ந்து கொள்கிறோம்'' என்றனர்.