| ADDED : ஜன 20, 2024 02:31 AM
பல்லடம்;பல்லடம் அருகே பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பல்லடம், கணபதிபாளையம் கள்ளிமேடு பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாய்சரண் 6. பொங்கலுார் அருகே, ராஜா மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.இறந்த மாணவரின் உடல், திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறுவனின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'சிறுவனின் உயிர் இழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். அதிவேகமாக பள்ளி வாகனத்தை இயக்குவது, பஸ்ஸில் உதவியாளர் இல்லாதது மற்றும் திறந்த நிலையில் உள்ள பஸ் கதவுகள் என, நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளி வாகனத்தை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகளும் வந்தனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மாணவனின் குடும்பத்துக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், கணபதிபாளையம் -- பொங்கலுார் ரோட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து தடைபட்டது.