கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி: திருமுருகன்பூண்டியில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய கட்டுமானப்பணி, நல்லாறு ஓடையை ஒட்டி மேற்கொள்ளப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில், கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.அன்னுாரில் துவங்கி அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் சங்கமிக்கும் நல்லாற்றின், பெரும் பகுதி புல், புதர், செடி, கொடிகளால் சூழப்பட்டு, உருமாறி கிடக்கிறது. இந்நிலையில், 'நல்லாறு ஓடையை ஒட்டி, பூண்டி நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. நீர்வளத்துறையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இப்பணி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இப்பணியில் சுற்றுச்சூழல் பாதிக்கும்' என, நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் கலெக்டர் மனீஷ் நாரணவரேயிடம் மனு வழங்கப்பட்டது. இதையடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி மேற்கொள்ளும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். 'வண்டிப்பாதை என வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடக்கிறது' என்பது போன்ற விளக்கங்களை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். பின், பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட இடங்களில் நல்லாறு மற்றும் அதையொட்டி கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகளை, கலெக்டர் பார்வையிட்டார். ரகசியம் காப்பது ஏன்? திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓரிடத்தில் சேகரித்து, அவற்றை சுத்திகரித்து நல்லாற்றில் விடுவது தான் திட்டம். கிட்டதட்ட, 15 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணி, நகராட்சியின் எதிர்காலத்துக்கு அவசிய தேவை என்ற போதிலும், இதுகுறித்து உரிய விளக்கத்தை மக்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும்.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்குமா, எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட போகிறது; இதனால், பூண்டி நகராட்சியில் உள்ள குடியிருப்புகள் பெறப் போகும் பயன் என்ன என்பது போன்ற திட்டத்தின் பயன்களை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு, பூண்டி நகராட்சிக்கு இருந்தும், அதை செய்ய தவறியதும்; வெளிப்படை தன்மை இல்லாமல், ரகசியம் காப்பதும் தான், சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்ப காரணமாகி இருக்கிறது என்கின்றனர் திருமுருகன்பூண்டி நகராட்சி வாழ் பொதுமக்கள்.