| ADDED : ஜன 11, 2024 07:12 AM
திருப்பூர் : 'ஸ்டிரைக்கை' முன்னிட்டு புதியதாக தேர்வு செய்யப்பட்ட தற்காலிக டிரைவர்கள் பஸ் ஸ்டாப் தெரியாமல் தடுமாறினர். நடத்துனர்கள் எந்த இடத்தில் விசில் கொடுக்க வேண்டும் என தெரியாமல் குழம்பினர்.கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த, 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் பஸ் ஸ்டிரைக் துவங்கியது. திருப்பூர் மண்டலத்தில், 400க்கும் அதிகமாக டிரைவர், நடத்துனர் உள்ள போதும், 30 சதவீதம் பேர் பணிக்கு வராததால், அவர்களது இடத்தை, அப்பணியை பூர்த்தி செய்யும் வகையில் தற்காலிகமாக, 60 டிரைவர், 60 நடத்துனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.தெரிந்த வழித்தடத்தில் பஸ் இயக்க இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சில டிரைவர்கள் பஸ் ஸ்டாப் ஒரிடம் இருக்க, அதற்கும் முன்பாக அல்லது பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி பஸ்சை நிறுத்தினர். அவிநாசியில் இருந்து திருப்பூருக்கு இயங்கி டவுன் பஸ் சிக்னலுக்கு முன்பே நிறுத்தப்பட்டது.வழக்கமாக சிக்னலை கடந்து, ஸ்டாப்பில் தான் பஸ் நிற்கும். ஆனால், முன்னதாகவே பஸ் நிறுத்தியதால், பயணிகள் பலர் ஓடிச்சென்ற ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது.'பீக் ஹவர்ஸில்' வேகமாக டிக்கெட் வழங்கிய நடத்துனர்கள் பலரால், ஸ்டாப் வருவதற்கு முன் விசில் அடித்து, டிரைவருக்கு சிக்னல் தர இயலவில்லை. திடீரென பணிக்கு வந்ததால், தற்காலிக டிரைவர்கள் சீருடை அணியாமல், வழக்கமான உடையுடன் பஸ் இயக்கியதை காண முடிந்தது.