உடுமலை:உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர்.மேலும், விநாயகர், பாலசுப்ரமணியர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.இங்குள்ள பாலசுப்ரமணியர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளன்று, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, திருச்சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, திருவீதி உலா நிறுத்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்நிலையில், முருகனுக்கு உகந்த கார்த்திகை தினமான நேற்று முன்தினம், சுப்ரமணிய சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், திருச்சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மூன்று ஆண்டுக்கு பின் நடந்த,கார்த்திகை விழாவில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.