உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4 மண்டலங்கள் உருவாக்க தமிழக அரசுக்கு கருத்துரு

4 மண்டலங்கள் உருவாக்க தமிழக அரசுக்கு கருத்துரு

திருப்பூர் : வரும் உள்ளாட்சி தேர்தலில், திருப்பூர் மாநகராட்சி எல்லை 60 வார்டுகளுடன் விஸ்தரிக்கப்படுகிறது. 15 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில், நான்கு மண்டலங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்கான கருத்துரு தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், வரும் அக்., மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று நடந்த தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியுடன் 15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.தற்போதுள்ள நிலவரப்படி, திருப்பூர் மாநகராட்சியில் 52 வார்டு கள் உள்ளன; இவை, 24 வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மற்ற இரு நகராட்சி பகுதிகள்; எட்டு ஊராட்சி பகுதிகள் 36 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 60 வார்டுகளாக திருப்பூர் மாநகராட்சி விரிவுபடுத்தப்படுகிறது.தற்போதைய 52 வார்டுகளும், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இதனால், மாநகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. மாநகராட்சி எல்லை விஸ்தரிக்கப்பட்ட பின், நான்கு மண்டலமாக பிரிக்கப்படும். மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகள் வருவாய் உள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே, வளர்ச்சி பணிகள் மற்றும் மண்டல அலுவலகத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும்.தற்போதுள்ள 52 வார்டுகளிலும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால், நல்ல வருவாய் கிடைக்கிறது. நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சி, எட்டு ஊராட்சி பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை.எனவே, மாநகராட்சி பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் 24 வார்டுகளை, மண்டலத்துக்கு தலா ஆறு வார்டுகள் வீதம் நான்கு மண்டலங்களுக்கு பிரிக்க வேண்டும். மீதியுள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 36 வார்டுகளை, தலா 9 வார்டுகள் வீதம் பிரித்து மண்டலம் உருவாக்க வேண்டும், ஒரு மண்டலத்துக்கு 15 வார்டுகள் அமையும் வகையில் உருவாக்க நிர்வாக தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மாநகராட்சியில் தற்போது பிரிக்கப்பட்டுள்ள வார்டுகள், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உருவாக்கியுள்ள வார்டுகள் குறித்தும், வருவாய் அதிகமுள்ள வார்டுகளை மையப்படுத்தி, மண்டலம் உருவாக்குவது குறித்தும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு பின், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கருத்து கேட்பு ஆலோ சனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மண்டலங் கள் உருவாக்கம் குறித்து விவாதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை