UPDATED : ஆக 11, 2011 05:30 AM | ADDED : ஆக 11, 2011 05:14 AM
உடுமலை:பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராமங்களுக்கு மாவட்ட
கலெக்டர் பரிந்துரைத்தும், ஒன்றிய பொது நிதியில் போர்வெல் அமைத்து
குழாய்கள் பதிக்க ஒன்றிய கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்,
குடிநீருக்கு தவிக்கும் மக்களின் தவிப்பிற்கு தீர்வு கிடைக்காத நிலை
ஏற்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கடந்த ஏப்., மாதம் முதல்
குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு
மக்கள் புகார் அனுப்பினர்.மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொண்டதில்
அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட சிந்திலுப்பு, மூங்கில்தொழுவு
ஊராட்சிக்குட்பட்ட மண்ணாம்பாளையம், குப்பம்பாளையம் ஆகிய கிராமங்களில்
கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது கண்டறியப்பட்டது.மாவட்ட கலெக்டர்
இந்த மூன்று கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டுக்குடிநீர் திட்டங்களில் நிலவும் சில பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு
காண முடியாது என்பதால் புதிதாக போர்வெல்கள் அமைக்க
திட்டமிடப்பட்டது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூன்று கிராமங்களிலும்
நிலத்தடி நீராதாரம் உள்ள பகுதிகளை தேர்வு செய்தனர். போர்வெல் அமைத்து,
கிராமம் வரை குழாய்கள் பதிக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு
பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்
அளித்தது.இதன் அடிப்படையில், இரண்டு கிராமங்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும்,
ஒரு கிராமத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்க
ஒன்றிய அதிகாரிகள் ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்தினர்.நிதி
ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற நேற்று நடந்த குடிமங்கலம் ஒன்றிய குழு சாதாரண
கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு
தலைவர் சுசிலா தலைமை வகித்தார். பி.டி.ஒ., மணிவண்ணன் முன்னிலை
வகித்தார்.நிதி ஒதுக்கீடு குறித்த மன்றப்பொருளை வாசித்ததும், கவுன்சிலர்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர். துணை தலைவர் ராஜமாணிக்கம்(தி.மு.க.,) பேசுகையில்,
எனது வார்டு பகுதியில் குடிநீர் போர்வெல் அமைப்பது குறித்து அதிகாரிகள்
எந்த தகவலும் அளிக்கவில்லை. வேறு நிதியில் போர்வெல் அமைக்கும் பணிகளை
மேற்கொள்ளலாம்', என்றார்.தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர் பர்வதவர்த்தினி,'
இது போன்ற பணிகளை மாவட்ட கலெக்டர் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளலாம்',
என்றார்.ஒன்றிய குழு தலைவர் சுசிலா மற்றும் அதிகாரிகள் தரப்பில் மக்களின் குடிநீர்
தேவைக்காக நிதி ஒதுக்கீடு செய்யலாம் என வலியுறுத்தப்பட்டது. ஆனால்,
கவுன்சிலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இறுதியாக, மூன்று லட்சத்தை
ஒதுக்காமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கலாம்
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலும், பிற பணிகளை மேற்கொள்ள 2 லட்ச
ரூபாய் நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே
போர்வெல்லுக்கு நிதி ஒதுக்க முடியும் என்றனர்.வளர்ச்சி பணிக்கு
பரிந்துரைகுடிநீர் பணிகள் இல்லாமல், ஒன்றிய பொது நிதியிலுள்ள 23 லட்சம்
ரூபாயை 13 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள்
பரிந்துரை வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த
பணிகளுக்கு மட்டும் அனைத்து கவுன்சிலர்களும் போட்டி போட்டுக்கொண்டு குறுகிய
நேரத்தில் பணிகளை கைப்பட எழுதி கொடுத்தனர்.