உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழையால் கொட்டுது தூவாணம் அருவி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மழையால் கொட்டுது தூவாணம் அருவி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

உடுமலை : அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தூவாணம் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த முறை எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் கடந்த சிலதினங்களாக மழை தீவிரமடைந்தது.

அணைக்கு முக்கிய நீர் வரத்து அளிக்கும் பாம்பாறு, தேனாறு, சின்னாற்றில் நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. பாம்பாற்றில் அமைந்த தூவாணம் அருவியில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் கொட்டுகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 986 கன அடி தண்ணீர் நீர் வருகிறது. கடந்த 12 ம் தேதி அணைக்கு 83 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. பருவமழை தீவிரமடைந்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போதைய நீர் மட்டம் 41.37 அடியாக உள்ளது. கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் வழியாக தலா 25 கன அடி மற்றும் 9 கன அடி வீண் என 659 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. பல மாதங்களுக்கு பிறகு தூவாணம் அருவில் தண்ணீர் கொட்டுவதால் மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் அருவியை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ