| ADDED : செப் 20, 2011 11:39 PM
திருச்சி: திருச்சியில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி விரிவுரையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார். திருச்சி கே.கே.நகர் நடராஜன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். ராணுவ வீரரான இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி சந்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள எஸ்.ஆர்.சி., கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனவருத்தம் அடைந்த சாந்தி உடனடியாக வீட்டின் ஒரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சாந்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் தற்கொலை குறித்து அவரது தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்திக்கும், ரமேஷூக்கும் திருமணம் நடந்து ஆறு ஆண்டே ஆவதால், வரதட்சணை கொடுமையால் சாந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருச்சி ஆர்.டி.ஓ., சம்பத் விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் சாந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.