விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.தொகுதியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும், தி.மு.க., பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்தி 178 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 276 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. அதனையாட்டி, தொகுதியில் கடந்த 25 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு பிறகு தொகுதியில் இருந்து வெளியேறினர். எஸ்.பி., எச்சரிக்கை
வாக்காளர்கள் அச்சமின்றி, அமைதியான முறையில் அச்சமின்றி ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஓட்டுச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 42 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. 220 மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட 2,651 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது. இதை மீறி அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ ஒலிபெருக்கி மூலமாகவோ, நேரடியாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ பிரசாரம் செய்தால் தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தீபக் சிவாச் எச்சரித்துள்ளார். நாளை உள்ளூர் விடுமுறை
விழுப்புரம் மற்றும் அருகாமை மாவட்டங்களில் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு, அவர்கள் ஓட்டு போட வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அதேபோல் இத்தொகுதியை சேர்ந்த பிற மாவட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும்.விக்கரவாண்டி தொகுதியை தவிர்த்த மாவட்டத்தில் பிற தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்கு விடுமுறை
தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலக இணை இயக்குனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம்
வி.சாத்தனுாரில் உள்ள தி.மு.க., பிரமுகர் முத்து,50; வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அதிரடியாக சோதனையிட்டு 810 சில்வர் டப்பாக்களை பறிமுதல் செய்தனர். இதனை அறிந்த பா.ம.க., மற்றும் பா.ஜ.,வினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்க முயன்ற தி.மு.க.,வினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.