உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்...

வயிற்று வலி: ஒருவர் தற்கொலை

திண்டிவனம்: கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர், முனியன், 50; குடிப்பழக்கம் உடைய இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டு மாட்டு கொட்டகையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

பெண்ணைத் தாக்கியவர் கைது

விழுப்புரம்: வளவனுார் அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அமலநாதன் மனைவி செல்வி, 39; அதே பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ், 59; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி துரைராஜ், செல்வியை திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து துரைராஜை கைது செய்தனர்.

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: டவுன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரான்சிஸ் தலைமையிலான போலீசார், நேற்று நகராட்சி மைதானத்தில் ரோந்து சென்றனர். அங்கு, குட்கா விற்ற கைவல்லியர் தெருவைச் சேர்ந்த பிச்சைமுகமது, 52; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

விவசாயி தற்கொலை

கண்டாச்சிபுரம்: பழவலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 64; விவசாயி. இவர், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் மீண்டும் வலி ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடன் மருத்துவமனைக்குச் செல்லும் போது வழியில் மூர்த்தி இறந்தார்.புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாராயம் விற்பனை: 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர், 36; இவர், தனது நண்பர் பிரபுவுடன் கடந்த 28ம் தேதி மாலை 6:30 மணிக்கு அங்குள்ள அய்யனார் கோவிலுக்குச் சென்றார்.அங்கு அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா, ஹரி, அருண் ஆகியோர் சாராயம் விற்பனை செய்துள்ளனர். கோவில் பக்கத்தில் சாராயம் விற்பனை செய்தது குறித்து கேட்ட சிவங்சங்கர், பிரபு ஆகியோரை நான்கு பேரும் சேர்ந்து தாக்கி, அங்கு நின்றிருந்த கார் கண்ணாடியை உடைத்து மிரட்டினர்.இது குறித்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் உட்பட 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் மாயம்

கள்ளக்குறிச்சி: சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவகுமார் மகள் காவியா, 20; இவர், சிறுவங்கூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்று வருகிறார்.கடந்த 28ம் தேதி கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

2800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பட்டிவளைவு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.தொடர்ந்து, பேரல்களில் இருந்த 2,800 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக, ஆண்டி மகன் ராஜேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

மாமனார் தாக்கு: மருமகள் மீது வழக்கு

விழுப்புரம்: சோழகனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசுரேந்திரன், 35; இவரது மனைவி ஓவியா, 32; கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக, 6 மாதங்களாக ஓவியா தனது தாய்வீடான சீர்காழியில் வசித்து வந்தார். கடந்த 29ம் தேதி, ராஜசுரேந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்பி, சோழகனுார் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டிலிருந்த மாமனார் ராஜேந்திரன், அனுமதிக்காததால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஓவியா மற்றும் அவரது தந்தை சண்முகநாதன், 61; தாய் பானுமதி, 58; ஆகியோர், ராஜேந்திரனை தாக்கினர். புகாரின் பேரில், ஓவியா உட்பட 3 பேர் மீதும் காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளம்பார் வழியாக சென்ற டிராக்டர் டிப்பரை நிறுத்தினர்.போலீசை பார்த்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடினார். உடன், போலீசார் சென்று பார்த்ததில் மணல் கடத்திச் சென்றது தெரிந்தது. தொடர்ந்து 1 யூனிட் மணலுடன் இருந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் வேல்முருகன், 29; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த டி.தேவனுாரைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி, 55; நேற்று முன்தினம் காலை ஆட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தகரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் துாக்கியெறியப்பட்டார். உடன், திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கார் மோதி வாலிபர் பலி

வானுார்: திண்டிவனம் அடுத்த வேம்பூண்டியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சதீஷ்குமார், 26; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர், நேற்று பைக்கில் ஓமந்துார் சென்றார். பிற்பகல் 3:30 மணியளவில் ஓமந்துார் கிராம சாலை சந்திப்பில் வளைந்த போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற எட்டியாஸ் கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடன் தகராறு: தந்தை, மகன் கைது

தியாகதுருகம்: சூ.பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, 54; இவருக்கு முருகன், சக்திவேல், சத்தியராஜ் என 3 மகன்கள் உள்ளனர். சொத்து மற்றும் கடன் பிரச்னை தொடர்பாக தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் முருகன், சக்திவேல் ஆகியோர் தனது தாத்தா தங்கவேலு, 96; என்பவருடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு செல்லதுரை, சத்தியராஜ் ஆகியோர் தங்கவேல் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்லதுரை, சத்தியராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி