| ADDED : மே 09, 2024 04:19 AM
மரக்காணம்: தனியார் பார்ம் ஹவுஸில் தங்கியிருந்த கோட்டக்குப்பம் தி.மு.க., கவுன்சிலரின் கணவர், மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் ஜமீத் நகரை சேர்ந்தவர் முகமது பாரூக், 55; இவரது மனைவி வகிதாபானு, கோட்டக்குப்பம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தி.மு.க.,வில் இணைந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது பாரூக், சமீப காலமாக கடன் பிரச்னையில் சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவரது வீட்டின் அருகே உள்ள சின்னக்கோட்டக்குப்பம் தனியார் பண்ணை வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். அப்போது அவரை சிலர் சந்தித்து பேசினர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முகமது பாரூக் தங்கியிருந்த அறை கதவு திறக்காமல் இருந்தது. சந்தேகமடைந்த பார்ம் ஹவுஸ் ஊழியர் காலை 9:00 மணிக்கு அறையை திறந்து பார்த்தபோது கட்டிலில் மர்மமான முறையில் முகமது பாரூக் இறந்து கிடந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார், முகமது பாரூக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவர், கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.மேலும், முகமது பாரூக் தங்கி இருந்த அறைக்கு யார், யார் வந்து சென்றனர், பார்ம் ஹவுஸில் உள்ள சி.சி.,டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.