திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நகர மன்றகூட்டத்திலிருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் நகர் மன்ற கூட்டம் 2 மாதங்களாக நடைபெறாத நிலையில், கடந்த மாத இறுதியில் 30 ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 51 தீர்மானங்களுக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க., - பா.ம.க., கவுன்சிலர்கள் என 18 பேர் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்ததால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் வெளிநடப்பு செய்த அனைத்து கட்சி கவுன்சிலர்களிடம் நகர மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், நேற்று மாலை 4:30 மணியளவில் கூட்டம் நடந்தது.நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிசந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பெறியாளர் பவுல்செல்வம், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 53 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதில் அவரப்பாக்கம், பாரதிதாசன் பேட்டையில் துணை சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பான தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதி தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் நாய் தொல்லை அதிகரித்துள்ளதால், நாய்களை பிடிக்க வேண்டும், நகரம் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும். மயிலம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் போகி பண்டிகை போல் நகராட்சி குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதால் காற்று மாசுபடுகின்றது.மேம்பால சீரமைப்பு பணியால், செஞ்சி செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரயில்வே இடத்தில், காவேரிப்பாக்கம் தரைப்பாலம் பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட வழியை, பாலம் சீரமைப்பு பணி முடியும் வரை, தற்காலிகமாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.நேரு வீதியில் பாதசாரிகள் நடக்கும் வகையில் இருபக்கமும் நடைபாதை அமைக்க வேண்டும், மேம்பாலத்தில் வயதானவர்களுக்காக எஸ்கலேட்டர் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர். வெளிநடப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக், சரவணன், திருமகள் ஆகியோர் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று நான்கு பேரும் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பிற்கான காரணம் குறித்து அவர்கள் கூறுகையில், 'திண்டிவனத்தில் ஒரே சமயத்தில் மேம்பால சீரமைப்பு பணிகளும், பாதாள சாக்கடை பணிகள் நேரு வீதியிலும் துவங்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை படத்துடன் மன்றத்தில் கேட்ட போது, பதில் இல்லை.நகராட்சியில் பொது நிதியிலிருந்து விதிமுறையை மீறி, நகர மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் வார்டிற்கு மட்டும் தனியாக ைஹமாஸ் விளக்கு வைப்பதற்கு தீர்மானம் கொண்டு வருகின்றனர்.நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. நேரு வீதியில் பாதாள சாக்கடை பணிகளால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி வசூல் மட்டும் செய்கின்றனர். பாதாள சாக்கடை பணிகளால், நேரு வீதி உள்ளிட்ட தெருக்களில் புழுதி பறக்கிறது.நகராட்சி சார்பில் அமைக்கப்படும் இந்து மயான நவீன தகன மையம் அடிக்கல் நாட்டியதோடு, வேறு எந்த வேலையில் செய்யவில்லை. நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் நிறை ந்துள்ளது. இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என்றனர்.கூட்டத்திலிருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.