விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த வி.கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமலை. ஊர்க்காவல் படைக்காவலராக பணியாற்றி வந்தவர், 2001ல் கொரோனா தொற்றால் இறந்தார்.அவரின் மனைவி பழனியம்மாள், 36, தன் ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன், ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறார். பழனியம்மாள் ஆதரவற்றோர் சான்றிதழ் பெற கடந்த ஆண்டு மே மாதம், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்து, நடையாய் நடந்தார்.இந்நிலையில், தமிழக அரசின் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பழனியம்மாள் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை பட்டாலியன் மைதானத்தில், ஆதரவற்றோர் சான்றிதழ் கிடைக்காத நிலையில், 7ம் தேதி நடந்த உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பழனியம்மாள் பங்கேற்றார்.அப்போது, ஆதரவற்றோர் சான்றிதழுக்கு விண்ணப்பித்தும், 10 மாதங்களாக கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதன்பேரில், அவருக்கு இரு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.அதன் பிறகும் சான்றிதழுக்கு அலைந்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நேற்று முன்தினம் 8ம் தேதி, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இதை அறிந்த தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், நேற்று காலை, பழனியம்மாளை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, பிரச்னை குறித்து கேட்டறிந்தார்.பின், விழுப்புரம் கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக சான்றிதழ் வழங்கிட அறிவுறுத்தினார்.இதையடுத்து, கலெக்டர் பழனியின் உத்தரவின்படி, ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் அமீது, நேற்று காலை 11:00 மணியளவில், பழனியம்மாளிடம் ஆதரவற்றோர் சான்றிதழை வழங்கினார்.மேலும், அமைச்சரின் உதவியாளர் அப்பு ஏற்பாட்டின்படி, பழனியம்மாள் சென்னைக்கு வாடகை கார் மூலம் மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு சென்றார். மாலை அவருக்காக தனியாக நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.