| ADDED : ஜன 23, 2024 10:27 PM
திண்டிவனம் : திண்டிவனத்தில் விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் உத்தரவின் பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இருவரும் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மாலை 6:00 மணியளவில் பைக்கில் திண்டிவனம் அரசு கல்லுாரி எதிரே உள்ள கூட்ரோட்டை கடந்தனர். பைக்கை ஆறுமுகம் ஓட்டினார்.அப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், பின்னால் அமர்ந்து சென்ற தனஞ்செழியன் படுகாயமடைந்தார்.இதுகுறித்து திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, தனஞ்செழியனுக்கு நஷ்ட ஈடாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 138 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.ஆனால், நஷ்ட ஈடு வழங்காததால் மனுதாரர் சார்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தனலட்சுமி, நஷ்டஈடு வழங்காத, விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.அதன் பேரில், புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.