| ADDED : நவ 27, 2025 04:54 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க நிர்வாகிகள் தாண்டவராயன், சகாபுதீன், பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாய சங்கத்திரனர் கருப்பு பட்டை அணிந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், மத்திய அரசு விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 22 சதவீதமாக தளர்வு செய்ய வேண்டும், அனைத்து விவசாய பயிர் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கின்ற மின்சார மசோதாவை ரத்து செய்து, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.